ஞாயிறு, 8 நவம்பர், 2015

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி-8

பொன்மொழிகள்
1. மக்கள் எழுச்சியின் முன்பு எந்தக் கொடுமைதான் நிலைத்து நிற்க முடியும்? ஜார் நிற்கவில்லை. பிரெஞ்சுக் குபேரர்கள் நிற்கவில்லை. கொடுங்கோலர்கள் யாருமே நிற்கமுடியவில்லை. குப்புற விழுந்தனர். தவிடு பொடியாயினர். வர்ணாஸ்ரமும் அப்படித்தான் நிச்சயம் விழுந்து ஒழியும்.

2. 'செயலாளர்' என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்? உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்?

3. ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

4. பேச்சு மேடையில் பெரும்புகழ் பெற விரும்புவோருக்கு அச்சம், தயை, தாட்சண்யத்துக்குக் கட்டுப்பட்டு கருத்தை அடகு வைக்கும் குணமும் இருத்தலாகாது. காட்டுக் குதிரை மீதேறிச் செல்லும் முரட்டுச் சுபாவமும் இருத்தலாகாது.

5. அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

6. மலர்கொண்டு மாலை தொடுத்தலில் கைத்திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கைத்திறன் முழுவதும் காட்டி காகிதப் பூமாலை தொடுத்தால் பயன் என்ன? பேச்சுக்கு அழகு தேவைதான். ஆனால் அழகு மட்டுமே இருந்து கருத்து இல்லையானால் என்ன பயன்?

7. ஒரு சிறு மின்சார விளக்கு தரும் அளவுக்கு ஒளிபெற நாம் எத்தனை அகல் விளக்குத் தேட வேண்டும் - கணக்குப் போட்டுப் பாருங்கள் - பிறகு கூறுங்கள் விஞ்ஞானம் அதிக உழைப்பு எனும் சிறையிலிருந்து நம்மை மீட்டு விடுதலை வீரனாக்குமா, அல்லவா என்பதை!

8. வாலிபர்கள் ஆசிரியர்களாக வேண்டும் - உலகத்தைக் கிராமத்தாருக்குக் காட்ட வேண்டும். வாலிபர்கள் வைத்தியர்களாக வேண்டும் - நாட்டு மக்களின் உடல், உள்ளம் இரண்டிலும் உள்ள நோய் தீர்க்கும் மருந்தளிக்க வேண்டும். ஆம்! வாலிபர்கட்கு வேலை ஏராளமாக இருக்கிறது.

9. பகலோனைக் கண்டதும் மலர்ந்திடும் பங்கஜத்தைப் (தாமரைப்) பட்டத்தரசனும்கூட சட்டமிட்டுத் தடுத்துவிட முடியாது. இதுபோலத்தான் உண்மைக் காதல் என்னும் உத்தம உணர்ச்சியை ஓராயிரம் பேர் முயன்றாலும் ஒரு நாளும் அழித்துவிட முடியாது.

10. நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும், நம்மால் ஆகுமா என்று பேசும் தொடை நடுங்கிகளும், ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளுமல்ல நாட்டுக்குத் தேவை. வீரர்கள் தேவை. உறுதிபடைத்த உள்ளங்கள் தேவை.

11. கருகிவிட இருந்த அரும்பு மலர்ந்தது போல - மங்கி விட்ட கண்கள் மீண்டும் ஒளி பெறத் தொடங்கியது போல - தேய்ந்த நிலவு திடீரென முழுமதியானது போல ஒரு நாட்டின் வரலாற்றிலே ஏற்படுகின்ற உன்னதமான சம்பவம் - சுதந்திரம்!

12. அஞ்சாநெஞ்சு படைத்த இலட்சியவாதிகள் தான் ஒரு நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வங்கள். ஏனெனில், பணம் வெறும் இரும்புப் பெட்டியில்தான் தூங்கும். ஆனால் இந்தச் செல்வங்களோ மக்களின் இதயப் பெட்டிகள் தோறும் நடமாடுவார்கள்.

13. சீமான்களில் சிலருக்குக் கூட சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம், பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது.

14. மேடைப் பேச்சு என்பது காலட்சேபமுமல்ல. வசன சங்கீதமும் அல்ல. இனிமைச் சுவையை எல்லோருக்கும் அளிக்கும் நா வாணிபமும் அல்ல. கைகட்டி கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமுமல்ல. உயிர்ப் பிரச்சினைகளைப் பற்றியக் கருத்துக்களை வெளியிடும் களம், மேடை.

15. புஞ்சையிலே நஞ்சைப் பயிர் பலிக்காது. குளிர்ப்பிரதேச விளைவு, கொதிப்புள்ள இடத்திலே பயிராகாது. அவை போலத்தான் புராண ஏடுகளை மட்டும் படித்துப் பயிலுவோரிடம் அறிவுத் தெளிவு ஏற்பட முடியாது.

16. ஒரு சிலரின் ஆசைக்கு மிகப் பலரை பலியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் முடிந்த கொள்கை. சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற வசதி என்பதுதான் சமதர்மத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி-7

பொன்மொழிகள்

1. கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதாரணமானவைதான். ஆனால் இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்.

2. மொழியால்தான் நால்வர், ஆனால் கலாசாரத்தால், பண்பால், பழக்க வழக்கங்களால், உடையால், உள்ளத்தால் ஒருவரே திராவிட இனத்தவர்.

3. வெட்டிப்பேச்சைத் தட்டி நடக்கும் தீரம், வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டுமென்ற வீரம், அநீதியைக் கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு - இவை, வயோதிகரை விட வாலிபர்களிடையேதான் மிகுந்திருக்கும்.

4. முடியுமா? காலம் சரியா? போதுமான பலமிருக்கிறதா? இந்தப் பேச்சு வாலிபர்கட்கு. இனிப்பாய் இரா. சும்மா இருக்கலாமா - சொரணையற்றவர்களா நாம் - புறப்படு - போரிடு - இந்தப் பேச்சுதான் வாலிபர் செவி புகும்.

5. சாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

6. பொதுவுடமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்ல நிலை.

7. பணக்கார உலகம் இருக்கிறதே அது மிகவும் விசிரமானது. பணம் மட்டும் இருந்துவிட்டால் அங்கே, முட்டாள்களும் புத்திசாலியாகப் போற்றப்படுவர். கோழையும் வீரர் பட்டம் பெறுவான். ஆனால் இது முறையா? சரியா? நாமும் இதை ஏற்கத்தான் வேண்டுமா?

8. இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த இலட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்குப் பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது.

9. தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டும் இருக்கும் நிலை மாறி, அவன், தொழிற்சாலைகளிலே பங்காளியாகவும் ஆக்கப்பட்டால்தான் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்.

10. பகுத்தறிவுக் கொள்கைகளை மறுப்போர் தொகை குறைந்துவிட்டது. நேர் மாறாக அவற்றைத் தூற்றுவோர் பிதற்றல் வளர்ந்துவிட்டது. இது குறையக் குறைய அது வளரும். அது இயற்கை.

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி-6

பொன்மொழிகள்

1. ஆத்ம சக்தியிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட காந்தியாருக்குக்கூட நோய் கண்டபோது, ஆத்மசக்தி அல்ல் ஆறு டாக்டர்கள்தான் அவசியமாகத் தேவைப்பட்டனர் ஏன்? அதைத்தான் கொஞ்சம் உங்களைச் சிந்திக்கச் சொல்லுகிறேன்.

2. ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

3. ரேடியோவும் டெலிபோனும் ஒலிபெருக்கியும் மின்சாரமும் ஞானப்பால் உண்டதால் வந்த வல்லமைகள் அல்ல. அசரீரி அடி எடுத்துக்கொடுத்ததால் உண்டான அற்புதங்களுமல்ல. தன்னலமற்ற அறிவாளிகளின் உழைப்பால் விளைந்த உன்னதப் பொருள்கள் அவை.

4. வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

5. நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப்பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

6. பல திறப்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.

7. விடுதலை பெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் நிலையை உண்டாக்குவதுமாகும்.

8. கெட்ட பொருள், குப்பை கூளம், காற்றுப் பொருள் - இவற்றிடம் தீண்டாமை அனுஷ்டிக்கத்தான் வேண்டும். ஆனால், பல கோடி மக்களை, தாய்நாட்டவரை, மூதாதையர் காலம் முதல் நம்முடன் வாழ்ந்து வருபவரைத் தீண்டமாட்டோம் என்று கூறுவது அறிவுடமை ஆகுமா? 

9. ஜாதி - இது ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி. பாழாய்ப்போன ஜாதிப்பேச்சு ஆரம்பமாகிவிட்டதா? எந்த ஜாதியாக இருந்தால் உனக்கென்னய்யா? இது அந்தக் கேள்விக்குரிய பதில் அல்ல. ஜாதியை நிலை நாட்டுவதற்குரிய தந்திரம். 

10. அவசியமானது - ஆகவே செய்யப்பட வேண்டியது என்பதல்ல முதலாளித்துவம். லாபகரமானது - ஆகவே, செய்யப்பட வேண்டியது என்பதுதான் முதலாளித்துவம்.

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி-5

பொன்மொழிகள்

1. ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.

2. விஞ்ஞானக் கண்டுபிடிப்பான மோட்டாரில் ஏறிக்கொண்டு வைதிகத் திருப்பதி மலைக்கு மொட்டையடிக்கச் செல்வது, முதல்தரமான முட்டாள்தனமல்ல. விஞ்ஞான அறிவுக்கு நாம் செய்யும் மகத்தான துரோகமும் ஆகும்.

3. அவதார புருஷனாகிய இராமனால் கண்டுபிடிக்கமுடியாத ரயிலை ஒரு சாதாரண மனிதனாகிய ஜேம்ஸ்வாட் தான் கண்டு பிடிக்க முடிகிறது. என்ன பொருள் இதற்கு? அவதார புருஷனாக இருப்பதைவிட சாதாரண மனிதனாக இருப்பது மேல் என்பது தானே?

4. அவர் சங்கரர்; இவர் ஜீயர்; இது தம்பிரான்; அது சாமியார் என்று யார் யாரையோ பூஜித்து அலுத்தீர்- பழைய வழியிலே நடந்ததால். இனி உழைப்பாளி விஞ்ஞானி. பொதுநல ஊழியன் என்பவரை ஆதரிக்கும் புதிய வழியில் நடவுங்கள்; உலகு சீர்திருந்தும்.

5. இந்தியாவில் அறிவு சூன்யமே. ஞானம் இருப்பதை இல்லை என்று கூறுவதே வேதாந்தம். இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கம். பொய்யும் புரட்டுமே சாஸ்திரம்.

6. தீண்டாமையைக் கையாள்வது நியாயமல்ல என்றுதான் தெரிகிறது. ஆனால் ..... என்று பலர் இழுத்தாற்போல் பேசுகின்றனர்.ஆனால் என்று அநேக காலமாகக் கூறியாகிவிட்டது. இனி நாம் ஆனால் என்பதை மறந்து ஆகையால் தீண்டாமை கூடாது என்று கூறியாக வேண்டும்.

7. அபின் விற்று வாழ்பவன். போதை கூடாது என்று சொற்பொழிவு ஆற்றுவானா? புராணப் பொய்யையே நம்பி வாழும் ஆரியர். மூடநம்பிக்கைக் கூடாது என்று போர்ப்பரணி பாடுவாரா? பாடத்தான் மாட்டார்கள்! எப்படிப் பாடுவார்கள்?

8. காரைக்காலம்மையை, கண்ணப்பரை, குகனை அவனுடைய ஓடத்தில் ஏறிச் சென்ற இராமனை, அனுமனை-அவன் வாலின் பெருமையை ஆகிய இவைகளையே நாம் இன்னமும் பேசிக் கொண்டிருந்தால், எப்படித் தோன்றுவார் ஒரு கலிலியோ இங்கு?

9. புஞ்சையிலே நஞ்சைப் பயிர் பலிக்காது. குளிர்ப்பிரதேச விளைவு, கொதிப்புள்ள இடத்திலே பயிராகாது. அவை போலத்தான் புராண ஏடுகளை மட்டும் படித்துப் பயிலுவோரிடம் அறிவுத் தெளிவு ஏற்படமுடியாது.

10. குடி கெடுப்பவன் - கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபமடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். விபசாரி அபிஷேகம் நடத்துவிக்கிறாள். இவ்வளவையும் தடையின்றி ஏற்றுக் கொள்கிறார் ஆண்டவன். ஏற்றுக் கொள்ளலாமா?

11. வியாசர் கூப்பிட்டபோது உலகம் வரவில்லை. நாம் கூப்பிட்டால் ரேடியோ மூலம் உலகமே நம் முன் வந்து நிற்கிறது. எதனால் ஏற்பட்டது இந்தத் திறமை நமக்கு? பக்தியாலா? இல்லை! பகுத்தறிவால்.

12. வாழ்வாவது மாயமாம்! இது மண்ணாவது திண்ணமாம் இப்படியானால் மண்ணாகக்கூடிய இந்த வாழ்விலே வெள்ளி வாகனங்களேன்! வைரக் கிரீடங்களேன்! மாணிக்க மூக்குத்திகளேன்? பரமன் ஆலயங்களிலே இவையெல்லாம் அமைக்கப்பட்டிருப்பதேன்? திராவிடர் என்ற சொல் கற்பனையுமல்ல. கனவுலகக் கண்டுபிடிப்புமல்ல. காவியத்தில் உள்ள சொல். வரலாற்றில் வருகிற பெயர். ஒரு சிறந்த இனத்தவரின் அரிய திருநாமம். அந்தப் பெயரைத்தான் கூறுகிறோம் நாம். இந்தியன் என்பது போன்ற அரசியல் சூதாட்டப் பெயரையல்ல.

13. சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.

14. மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.

15. ஆழ்வாராதிகள், நாயன்மார்கள் கதைகளைப் புராணிகர்கள் படிக்கட்டும். வீர வாலிபர்களே! நீங்கள் உலக அறிவாளிகள், உத்தம விஞ்ஞானிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள்.

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி-4

பொன்மொழிகள்

1. சித்திரை, வைகாசியில் கருடசேவை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூரம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசிக்குத் திருப்பதி என்று ஒவ்வொரு மாதத்தையும் நாம் புண்ணிய காரியத்துக்கே செலவிட்டால் வேறு உருப்படியான காரியத்தை எப்போது தான் புரிவது?

2. ஆயிரம் கண்ணுடையாள் என்று அர்ச்சிக்கிறார்களே காளியை, அதில் ஒருகண்ணால் பார்க்கக்கூடாதா ஏழைகளை! ஏழைகள் படும் அவதியை! அவளை பக்தியோடு பூஜித்தால் பலன் உண்டு என்று சொல்கிறார்களே பூஜித்துப் பூஜித்து ஏழைகள் கண்ட பலனென்ன?

3. சினிமாப் படத்தில் யாரோ ஒரு மாது ஆபாசமாகக் காட்சியளித்தால் ஆக்ரோஷத்துடன் அதைக் கண்டிக்கிறோம். ஆனால் கம்பன் கலையிலே நெளிந்து கிடக்கும் காமரசத்தைக் கண்டிக்கமட்டும் தயங்குகிறோம். ஏன்?

4. முதலாளி - நிலப்பிரபு - புரோகிதன் இந்த மூவகைச் சுரண்டல் சக்திகளிலே ஒன்றைவிட்டு மற்றதை மட்டும் முறிப்போம் என்றால் முடியாது. ஏனெனில் சுயநலம், சுயசுகம் என்ற பசைபோட்டு இந்த மூன்று வளைவுகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.

5. ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?

6. எங்கோ ஒரு குக்கிராமத்தில் குறி கூறுவான் ஒரு தந்திரக்காரன். அங்கே கும்பல் கூடும். அதற்கு அருகே அரியதோர் இயற்கை காட்சி இருக்கும். ஆனால் அதைக் காணவோ யாரும் வரார். இப்படிப்பட்ட நாட்டிலே இலக்கியம் வளரவில்லை என்றால் எப்படி வளரும்?

7. பாசியை நீக்கிவிட்டுக் குளத்தின் படிக்கட்டுகளை இடித்த கதைபோல, கனியைக் கொடுத்துவிட்டு, கடுவனையும் நிறுத்தியதுபோல. காலிலே தண்டையைப் பூட்டிவிட்டுக் கழுத்துப் புண்ணுக்கு மருந்திட மறுப்பது போல, பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தது. ஆனால் தீண்டாமையைத் தடுக்கவில்லை. துடுக்கர் கூட்டத்தை ஒடுக்கிற்று. ஆனால் மதத்தரசர் கூட்டத்தைக் கொழுக்கவைத்தது. நகர், ஊர் பலவற்றை எழுப்பிற்று. ஆனால் சேரிகளைத் தகர்க்காது விட்டது. ஆம் ஏகாதிபத்தியத்தின் போக்கு மிகவும் விசித்திரமானது.

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி - 3

பொன்மொழிகள்

1. நாலுவேதம், ஆறுசாஸ்திரம், அறுபத்து நான்கு கலைஞானம் இருக்க, பராசர் யாக்ஞவல்கியர் உபதேசங்கள் இருக்க, உன்னதமான உபநிஷத்தும் உத்தமமான கீதையுமிருக்க, ஒரு வாசகத்துக்கும் உருகாதாரையும் உருகவைக்கும் திருவாசகம் இருக்க, முருகன் அருளைத் தரும் திருப்புகழ் இருக்க, எல்லாம் இருந்தும் இந்த நாட்டிலே இல்லாமையும் போதாமையும் கூடவே இருக்கின்றனவே - அது ஏன்? இல்லாமையைப் போக்க இந்த ஏடுகளால் முடியவில்லை என்றால் ஏன் இருக்க வேண்டும் இவை இன்னமும் இந்த நாட்டிலே?

2. இங்குள்ள ஜாதித் திமிரைக் கண்டிக்க முன் வராத வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறத் திமிரைக் கண்டிப்பது மகத்தான குடியன் மதுவிலக்கு பிரசாரம் புரிவது போன்ற செயல் தவிர வேறென்ன?

3. ஜாதி - இது ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி. பாழாய்ப்போன ஜாதிப்பேச்சு ஆரம்பமாகிவிட்டதா? எந்த ஜாதியாக இருந்தால் உனக்கென்னய்யா? இது அந்தக் கேள்விக்குரிய பதில் அல்ல. ஜாதியை நிலை நாட்டுவதற்குரிய தந்திரம்.

4. பூமியிலே புரண்டு கோவிந்தா போடுவதும், வேல் குத்திக் கொண்டு வேலாயுதா என்று சொல்வதும் பக்தி என்று சொல்லப்படுமானால், பக்தி என்ற சொல்லுக்குப் பொருள் பைத்தியம் என்பதாக இருக்கவேண்டும் அல்லவா?

5. நடுப்பகல் - சுடுமணல் - பெருநடை - சுகமான பயணம் - இந்நான்கு தலைப்புகளையும் ஒரே செய்திக்குப் பயன்படுத்தும் தோழரை நீங்கள் என்னவென்று கூறுவீர்கள்? அண்டப் புளுகர் என்பீர்கள்! அத்தகைய புளுகர்களால் எழுதப்பட்ட அர்த்தமற்ற ஏடுகள்தான் புராணங்கள்.

6. விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த மோட்டாரில் ஏறிக்கொண்டு அஞ்ஞானத்தை வளர்க்கும் பஜனை மடத்திற்குச் செல்லும் நம் போக்கைக் கண்டு, உலகக் கொட்டகையில் எவ்வளவு பேர் கேலி செய்கிறார்களோ? யார் கண்டார்கள்? செய்யாமலா இருப்பார்கள்!

7. ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி - 2

 பொன்மொழிகள்


1.    பொதுவுடைமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ணிய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்லநிலை.

2. அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

3. குழந்தைப் பருவத்தில் மனித சமுதாயம் இருந்தபோதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் என்று கடவுட் கதைகள் தேவைப்பட்டன. அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றுள்ள இந்தக் காலத்தில் இவை எதற்கு?

4. உயர்வகுப்பென்று உறுமிக்கொண்டு பிறரை அடக்கியாள்வதும் ஆண் என்று ஆர்ப்பரித்துப் பெண்களை இழிவு செய்வதும்தான் புனித இந்து மார்க்கத்தின் பெரிய பெரிய நீதிகள். நாடு வாழவேண்டுமானால் இத்தகு நீதிகளைத் தரும் மார்க்கம் மறைய வேண்டும்.

5. புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.

6. சர்வேஸ்வரனின் பொருள் களவு போனால் கூட சாதாரண போலீஸ்தான் கண்டுபிடிக்கிறதேயொழிய கடவுள் சக்தி அதற்கும் பயன்படுவதில்லையே - ஏன்? இந்தச் சில்லறைச் சேட்டைகளைக் கூடத் தடுக்க முடியாத தெய்வங்கள் இருப்பதால் நாட்டுக்கு என்ன பயன்?

7. காதல் உற்றவனின் உறுப்புக்களைச் சிதைப்பது, தவமியற்றிய தமிழன் தலையை வெட்டுவது, தம்பியின் துரோகத்தைத் துணைகொண்டு அண்ணன் தலையைக் கீழே உருட்டுவது - இதன் பெயர்தான் இராமாயணம். இந்த இராமாயணம் நமக்குத் தேவையா?

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பகுதி -1


அண்ணாவின் சிந்தனைகளுள் சில,  

'அண்ணா அவர்கள் நமது நாட்டுக்கு ஒரு நிதி என்று தான் சொல்ல வேண்டும். பகுத்தறிவாளர், மூடநம்பிக்கையற்றவர், மூடநம்பிக்கையை ஒழிக்க என்னோடு இருந்து தொண்டாற்றியவர் ஆவார். இவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுத்தறிவுக் கொள்கைப்படி துணிந்து ஆட்சி செய்கிறார். இமயமலை அளவு எதிர்ப்பு இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாது, துணிந்து செயலாற்றி வருகிறார் வாழ்க அண்ணா'
                                                                                                                            - தந்தை பெரியார்

1.    ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

2.    என்ன இருந்தாலும் சார், கலையைக் கெடுக்கக்கூடாது பாருங்கோ என்று குழைவுடன் கூறும் குணாளர்களைக் கேட்கிறேன். கலை, மக்கள் நிலையை மாசுபடுத்தும்போது அந்தக் கலையைத் தொலைக்காமல் வேறென்ன செய்வது?

3.    முருகன் என்றால் அழகுதான்; வேறல்ல என்கிறார்கள் சில முருகதாசர்கள். அப்படியானால் அன்றலர்ந்த ரோஜா, அடவி, ஆறு, மலை, மேகம், வெண்ணிலா, வானவில் ஆகிய அழகுப் பொருள்கள் இருக்க முருகன் என்றோர் தனிக் கற்பனை எதற்கு?

4.    மின்சார விளக்குகள் தேவையில்லை - பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும். விமானம் பறக்கக்கூடாது - கருடன்தான் பறக்கவேண்டும். ரயில் வண்டி கூடாது - கட்டை வண்டிதான் சிறந்தது. தீப்பெட்டி தேவையில்லை - சிக்கி முக்கிக் கல்தான் தேவை. துப்பாக்கியா வேண்டாம் - வேலும் வில்லும் போதும். மாளிகைகள் தேவையில்லை - பர்ணகசாலைதான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை. ஆனால், இந்தக் காலம் கெட்டுவிட்டது. பழைய காலம்தான் நல்ல காலம் என்று பேசவோ தயங்குவதில்லை. இப்படிப் பேசலாமா? பேசுவது நாணயமா?

இலக்கியங்களில் சமுதாயச் சித்திரிப்பு


சமுதாயச் சித்திரிப்பு

       இலக்கியமென்பது மொழியாலான ஒரு சமூகம் எனச் சொல்லப்படுவதன் பொருள் என்ன? இலக்கியம் சமூகத்தில் இருந்துதான் பிறக்கிறது என்றாலும் சமூகமும்  இலக்கியம் காட்டும் சமூகமும் ஒன்றல்ல என்பதுதான் அதன் பொருள்.  அதாவது இடையில் ‘மொழி’  என்கிற ஊடகம் இருக்கிறது. எனவே இலக்கியம் சமுதாயத்தைச் சித்திரிப்பதற்குப் பல அழகியல் உத்திகளைப் பயன்படுத்துகிறது என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது.  இலக்கியம் மனித சமூகத்தை அழகியல் முறையில் புரிந்துகொள்ளப் பயன்படும் ஒரு வடிவம். சமுதாயத்தைச் சித்திரிப்பதற்கு முயலும் படைப்பாளிக்கென்று தன் காலம் தனக்குள் கட்டமைத்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு  கொள்கை எதிர்காலக் கனவு முதலியவற்றின் அடிப்படையில் ‘தேர்ந்தெடுக்கிற’  ஒரு முறையியல் செயல்படுகிறது.  ‘இந்த மனித வாழ்க்கை பயங்கரமானது அது வேறு ஒரு வகையில் இருக்கவே முடியாது’  என்று ஒருவர் இந்தச் சமுதாயத்தைச் சித்திரித்துக் காட்டுகிறார் என்றால்  அவர் ஒரு புள்ளியில் ஒரு கோணத்தில் நின்றுகொண்டு இச்சமூகத்தின் ஒரு கூறினை வெளிப்படுத்துகிறார் என்றுதானே நாம் பொருள் கொள்ள முடியும். எனவே சமுதாயச் சித்திரிப்பு என்பது படைப்பாளியின் அணுகுமுறைக்கு ஏற்ப மாறக்கூடியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  எழுத்தாளர்களின் பின்புலம்  நோக்கம்  சமுதாயத் தேவை எதிர்கோள் ஆகியவற்றிற்கு ஏற்பச் சமுதாயச் சித்திரிப்பு அமையுமென வரையறுக்கிறார் தி.சு. நடராசன். நான்கு விதங்களில் அச்சித்திரிப்பு அமையலாம் எனவும் அவர் கூறுகிறார்.  1. சமுதாயச் சிக்கல்களை எதிர்கொண்டு நேராகக் காட்ட விரும்பாமல் மிகையான கற்பனையுடன் புனைந்துரைத்தல் அல்லது பழைய சமூக வாழ்க்கையை உயர்த்திக்காட்டி அதைத் திரும்பக் கொண்டுவர விரும்புதல் 2. வாழ்க்கை அனுபவங்களை நுணுக்கமான விவரங்களுடன் இயல்பு நவிற்சியாகச் சித்திரித்தல் 3. அவற்றை அப்படியே சொல்வதோடு அவற்றை விமர்சித்தும் கூறுதல் 4. சமுதாய நிலைகளையும் போக்குகளையும் காரண-காரிய முறையில் இனம் கண்டு கூறுதல் (தி.சு. நடராசன் பக். 58-59).

    பாரதியார் தம்காலத் தேவைக்கு ஏற்பவும் தாம் சார்ந்த தேசிய இயக்கக் கொள்கைகளுக்கு ஏற்பவும் பழைய இந்தியச் சமூகத்தின் சிறப்புகளையும் சித்திரித்தார். நடப்புவாழ்வின் அடிமைத்தனம் மிடிமை அறிவின்மை ஆகியவற்றையும் ‘நெஞ்சு பொறுக்குதிலையே’  என்று சித்திரித்தார்.
   
        எதிர்கால இந்தியா எப்படியிருக்கவேண்டும் என்ற தம் கனவுகளையும் காட்டினார். அரசியல் அறங்கள் சமயம் பண்பாட்டு நிகழ்வுகள்   பொருளாதார நடவடிக்கைகள்   குடும்பம்   தனிமனித உணர்வுகள் எனப் பல்வேறு பிரிவுகளையும் உள்ளடக்கியது சமூகம்  அதனைச் சித்திரிப்பதில் மேற்கண்ட சில  பல  அல்லது ஒன்று மட்டும் கூடப் படைப்பில் இடம்பெறலாம். எடுத்துக்காட்டாக  லா.ச.ரா.வின் படைப்புகள் அனைத்துமே குடும்பம் என்ற நிறுவனத்தையே மாபெரும் தளமாகக் கொண்டு அதன் சிக்கல்கள்  சிறுமை - பெருமைகள்  நுட்ப உளவியல் சிக்கல்கள்  தத்துவ விசாரங்கள் என விரிகின்றன.  பெரும்பாலான உரைநடைப் படைப்பாளிகள் குடும்ப நிகழ்வுகளையே மிகுதியும் சித்திரித்தனர்.  அவர்களுள் தி. ஜானகிராமன் குடும்பங்களுக்குள் பாலியல் உணர்வு -   உறவுகளை அதிகம் சித்திரித்தார். சிலப்பதிகாரத்தில் குடும்பம் என்பதோடு அரசியல்  அறங்கள்  சமயம் பண்பாட்டு நிகழ்வுகள் போன்ற பலவும் சித்திரிக்கப்பட்டுள்ளன.


              மனித வாழ்விடச் சு10ழல்கள் படைப்புச் சித்திரிப்புகளில் சிறப்பிடம் பெறுவன.  சங்க காலத்தில் குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் ஆகிய ‘இடம்’ சார்ந்த சித்திரிப்புக்கள் கதை மாந்தர்கள் போலச் சங்க இலக்கியப் பாடல்களில் மிகச் சிறப்பாக ஒவ்வொரு பாடலிலும் இடம் பெற்றிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.  ஆற்றுப்படை இலக்கியங்களில் இந்தச் சித்திரிப்பு விரிவாகவே அமைந்துள்ளது. இது போலவே பெரும்பொழுது  சிறுபொழுதெனக் ‘காலம்’  சார்ந்த சித்திரிப்புகளும் இலக்கியத்தில் தொடர்ந்து கையாளப்பட்டு வந்துள்ளன. தொல்காப்பியர் அக இலக்கியத்துக்கு இலக்கணம் கூறும்போது நிலம் பொழுது ஆகியவற்றை அவ்விலக்கியத்துக்குரிய ‘முதற்பொருள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே.       (தொல். அகத். 4)

பின் வந்த தண்டியலங்காரம் பெருங்காப்பிய நிலை பேசும்போதுகூட மலை கடல் நாடு நகர் இருசுடர்த் தோற்றம்  மறைவு பற்றிய வருணனைகள் இடம்பெற வேண்டும் என விதித்துள்ளதும் எண்ணத் தக்கது. இடைக்காலத்தில் பக்தி இலக்கியங்களிலும் காவியங்களிலும் கால இட வர்ணனை இன்றியமையாத இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.  நவீன இலக்கியங்களில் நகர்ப்புறச் சித்திரிப்புகளும்  ‘வட்டார இலக்கியம்’ என்ற பேரில் கிராமப்புறச் சித்திரிப்புகளும் இடம் பெறுவதைக் காண முடிகிறது.  

          அசோகமித்திரன் இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் புனைகதைகளில் நகரம் சார்ந்த சித்திரிப்புகளும்  கி. ராஜநாராயணன் பூமணி நீல. பத்மநாபன் சண்முகசுந்தரம் முதலியோர் கதைகளில் கிராமப்புறச் சித்திரிப்புகளும் மிக மேலான படைப்பாக்கத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.

   கதை சொல்லல் எனும் படைப்பு நடவடிக்கை   இடத்தையும் காலத்தையும் சுட்டாமல் சாத்தியமில்லை. எனவேதான் இலக்கியச் சித்திரிப்பில் இவைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

       சமூகத்தில் பலவேறு பிரிவினர் வாழ்கின்றனர். தொழில் சாதி வர்க்கம் மொழி பால் முதலியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் அடையாளங் காணப்படுவது இயல்பாக இருக்கிறது.  இந்தப் பிரிவினரின் வாழ்வில் காணப்படும் பருமையான நுட்பமான வேறுபாடுகளுடன் வாழ்ந்து விவரங்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் இலக்கிய ஆக்கம் உருவாவதும் வழக்கமாகி இருக்கிறது. செல்வராஜ் ‘தேனீர்’ என்ற நாவல் மூலம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் பாமா ‘கருக்கு’ என்ற நாவல் மூலம் தலித் மக்களின் வாழ்வினையும் சு. சமுத்திரம் ‘வாடாமல்லி’ என்ற நாவல் மூலமாக அலிகளின் வாழ்க்கையினையும்  ச. பாலமுருகன்  ‘சோளகர் தொட்டி’  மூலம் பழங்குடி மக்களின் வாழ்வுத் துயரங்களையும் சித்திரித்துள்ளனர்.

    இலக்கியத்தில் இடம்பெறும் கடவுள்  புராணம்  சமயம் சார்ந்த சித்திரிப்புகளுக்கும் சமூகத்திற்கும் என்ன தொடர்பு? நாம் முன்பே பார்த்தது போலக் குடும்பம் கல்வி அரசு முதலியவை போலச் ‘சமயமும்’ எந்தவொரு சமூகத்திலும் நிறுவனத்திற்குரிய பண்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே சமயமும் சமூகம் சார்ந்ததுதான்.  சமயம் சார்ந்த கடவுள் தத்துவம் வழிபாடு விழாக்கள் போன்றவை மக்களின் அன்றாட வாழ்வில் இடம் பெறுகின்றன.  எனவே அவற்றைச் சித்திரிப்பதும் சமூகச் சித்திரிப்பின்பால் அடங்கும்.

      இத்தகைய பல்வேறு சமூகச் சித்திரிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கியத்தின் சமூகப் படப்பிடிப்பைத் திறனாய்வாளன் எடுத்துக்காட்டுவது சமுதாயவியல் அணுகுமுறையின் பயன் ஆகும்.